பராட்டா உருண்டை

குஞ்சாலி மரைக்காயர் தெரு முனையில் சின்னதா ஒரு அடுப்பு வச்சு அதுல பொறிக்கன் சட்டிய வச்சு மைதா மாவ உருண்ட புடிச்சு சட்டில போட்டு பொறிச்சு சுடச்சுட காட்சி தரும் பதார்த்தத்தை கிட்டதட்ட நாகூரில் இருக்கும் எல்லா நாவுமே ருசி பார்த்திருக்கும். பரோட்டா உருண்டய பத்தி தெரியாதஹலே இருக்க முடியாது.

எங்க மாமி ஒருத்தர் அவரிடம் பணிபுரியும் ஒரு நபரிடம் "கடக்கி போய் பராட்ட உருண்ட 10ரூவாய்க்கி வாங்கிட்டு வாரும்" என்று சொல்ல - அவர் மியா தெரு முனைக்கி போய் தஸ்தகீர் பாய் கடையில போய் பராட்டா ரொட்டி சுடுறதுக்கு முன்னாடி உருண்ட புடிச்சி வச்சிருப்பாஹல்ல அந்த பராட்டா உருண்டய காட்டி, 'பராட்டா உருண்ட 10 ரூவாய்க்கி தாங்க" என்று கேட்டிருக்கிறார்.

கடயில இருக்குறஹ கொழம்பி போய் 'ஓய் என்னாங்கணி சொல்றீயோம், இந்த உருண்டய யாருமே கேக்க மாட்டாஹலேங்கனி' என்று சொன்னதற்கு,

"இது தான் கேட்டாஹா, நான் தான் காசு தர்ரேன்ல, நீங்க கேக்குறத கொடுக்க வேண்டியது தானே" என்று நல்லவிதமாக எடுத்து சொல்லியிருக்கிறார். நமக்கு ஏன் வம்புன்னு அதே உருண்டையை பையில அடைச்சு கடைகாரர்கள் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.

அந்த மனுசன் கட்டி கொடுத்த பராட்டா உருண்டயை வாங்கி வந்து "இந்தாங்க லாத்தா, நீங்க கேட்ட பராட்டா உருண்ட" என்று நீட்டியிருக்கிறார்.

சரியான பசி எடுக்கும் மாலை நேரம், எங்க மாமியோ மிகவும் கோபக்காரர். ஒரு வேலைக்கார பெண்மணியிடம், 'ஒரு நிமிசத்துல என் கண்ணு முன்னாடி பராட்டா உருண்ட இருக்கணும் விறுவிறுன்னு தட்டு எடுத்துட்டு வா..' என்று சொல்லி விட்டு பாயில் கண்ணை மூடி உட்கார்ந்திருந்த அவரிடம், "லாத்தா பராட்ட உருண்ட" என்றிருக்கிறார் அந்த வேலைக்கார பெண்மனி.

கண்ண தொறந்து பார்த்தாஹல்ல.. கண்ணு முன்னே பராட்டா உருண்ட தட்டுல ஜெதப்பா ஒட்காந்துகிட்டு இருந்தது.

(அவ்வளவு தான், இந்த பதிவு முடிந்தது,) நீங்க யாரும் எங்க ஊருக்கு வந்தீங்கன்னா பராட்டா உருண்டய சாப்பிடாம போயிடாதீங்க, நான் வேணும்னா எங்க மாமிட்ட பணிபுரிந்த அந்த நானாவிடம் வாங்கிட்டு வர சொல்றேன்.

Comments

Popular posts from this blog

கதவு

முராது பேக் அவர்கள் ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்களின் வீட்டை பற்றிய கமெண்ட்...

JB பாஷா பாய்